மட்டக்களப்பு ஏறாவூரில் பொதுமக்கள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இராணுவ உறுப்பினர்கள் சிலர், இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் உத்தரவின் பேரில், கடமைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏறாவூர் பகுதி வீதி ஒன்றில் பொதுமக்கள் குழுவினரை படையினர் துன்புறுத்தியதாகக் கூறப்படும் சில புகைப்படங்கள் ஊடகங்களில் பதிவிடப்பட்டிருந்தன.
இது தொடர்பில் ஆரம்ப இராணுவ காவல்துறை விசாரணை ஏற்கனவே தொடங்கியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
பயணத் தடையை மீறியவர்களை, படையினர் கட்டாயப்படுத்தியதாகவும், முழங்காலில் நின்று கைகளை உயர்த்த உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் முழுமையான விசாரணைகள் முடிந்ததும், தவறு செய்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் எதிராக இராணுவம் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் ஏறாவுரில் தண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு வெளியாகியிருந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்ததுடன், பலரும் தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.