மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இராஜாங்க அமைச்சரின் மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட மணல் லொறி சாரதியான மகாலிங்கம் பாலசுந்தரத்தின் சடலம், நேற்று முன்தினம் (23) மாலை பெருமளவான மக்களின் கண்ணீருடன் ஊறணி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இதன்போது, “அமல் எங்கள் நண்பனை மீட்டுத்தர முடியுமா?” “கரங்கொடுத்து தூக்கிவிட்டவர்களை காலடியில் நசுக்கும் விசமிகளின் பசிக்கு இரையாகிய அப்பாவி இளைஞனின் மரணத்துக்கு நீதிவேண்டும்” போன்ற கோரிக்கை தாங்கிய பதாகைகளை, சடலம் தாங்கிய பேழை ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் மாத்திரமே அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக சடலம் வைக்கப்பட்டிருந்தது. அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப் பலர் அஞ்சலி செலுத்தினர்.
இதனையொட்டி, சடலம் வைக்கப்பட்டிருந்த பகுதியெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.
வா.கிருஸ்ணா