நத்தார் பண்டிகையை முன்னிட்டு 3 பெண் கைதிகள் உட்பட 309 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு மன்னிப்பு வழங்கப்படுவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 08 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு (25) திகதி நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வு மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் டபிள்யூ.ஏ.ஜே.அரவிந்த உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.