தெல்லிப்பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 10 இளைஞர்களை கோப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கோப்பாய் பகுதியில் வசிக்கும் குறித்த சட்ட வைத்திய அதிகாரி தனது கடமையின் நிமித்தம் நள்ளிரவு 12 மணியளவில் காரில் சென்றுள்ளார்.
அதன்போது, கோப்பாய் நாவலர் பாடசாலைக்கு முன்பாக வீதியை மறித்து மோட்டார் சைக்கிளில் நின்ற இளைஞர்கள் குழுவொன்று பிறந்தநாள் தினத்தினை கொண்டாடியுள்ளனர்.
இளைஞர்கள் குழுவின் பிறந்தநாள் கொண்டாடத்தினால், அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு இருந்தது. அதனால் சட்ட வைத்திய அதிகாரி தனது கடமைக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்ட்டமையால், அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அங்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 10 இளைஞர்களை கைது செய்ததுடன், அங்கு நின்ற இரண்டு மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.