உலக செல்வந்தர்களின் பட்டியலில் நான் இருந்தாலும், இல்லாமல் போனாலும் எனக்கு கவலை இல்லை- பில் கேட்ஸ்

 


செல்வந்தனாக இருப்பது என் வாழ்வில் வசதியை சேர்க்கிறதே தவிர நிறைவை அல்ல என்றும் தனது சொத்துகளை தானமாக வழங்குவதாகவும்  பில் கேட்ஸ் அவரது வலைப்பதிவில் பேசியுள்ளார்.

2022-க்கு பிரியா விடை கொடுக்கும் வகையில் அனைவரும் சிறப்பு பகிர்வுகள் மூலம் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் பில் கேட்ஸ், வாழ்வின் நிறைவு குறித்து தனது வலைப்பதிவில் பேசியுள்ளார்.

 

67 வயதான அவர் கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர்.

இதில் 2010 முதல் 2013 வரையில் அவர் முதலிடத்தை இழந்திருந்தார். அதனால், உலகம் முழுவதும் அறியப்படுகின்ற செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார் பில் கேட்ஸ்.

 

இப்போது உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 103.6 பில்லியன் டொலர்கள் ஆகும்.

இந்தச் சூழலில் 2022-க்கு நன்றி சொல்லியும், எதிர்வரும் 2023-க்கு தனது விருப்பம் குறித்தும் அவர் அவரது வலைப்பதிவில் பதிவிட்டுள்ளார். 

குறித்த பதிவில்,“செல்வந்தனாக இருப்பது என் வாழ்வில் வசதியை சேர்க்கிறதே தவிர நிறைவை அல்ல.

அந்த நிறைவை பெற எனக்கு குடும்பம், நண்பர்கள் மற்றும் வேலை அவசியாகிறது. இந்த மூன்றையும் பெற்றதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

எனது பணிகள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த உலகத்தை உருவாக்க முடியும் என நம்புகிறேன். சமூகத்திற்காக இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தொடங்கிய திட்டங்களை அதே வேகத்தில் தொடருவேன்.

அதன் மூலம் எனது வளங்களை சமூகத்திற்கு தர உள்ளேன். அதனால் உலக செல்வந்தர்களின் பட்டியலில் நான் இருந்தாலும், இல்லாமல் போனாலும் எனக்கு கவலை இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.