பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான விழிப்புணர்வு முன்னாயத்த வேலைத் திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் இச் செயல்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவேஸ்வரன் மகளிர் சிறுவர் பிரிவு அலுவலகர்கள், பொலிஸ் பாதுகாப்புப் படை அதிகாரிகள் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அலுவலர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிராக இழைக்கப்படும் வன்முறைகள், இம்சைகள் வெறுப்புணர்வூட்டக் கூடிய சம்பவங்கள் இடம்பெறும்பொழுது அதுபற்றி பொதுமக்கள் உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தும் இலகு வழிமுறையிலமைந்த அவசர தொலைபேசி இலக்கங்கள் கொண்ட சுவரொட்டிகள் மக்கள் கூடும் பொது இடங்களிலும் பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து பேருந்துகளிலும் ஒட்டப்பட்டன.
மேலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரதான அஞ்சல் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள் உள்ளுராட்சி மன்ற அலுவலகங்களிலும் இந்த அவசர தொலைபேசி இலக்கங்களைக் கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இந்த செயற்திட்டம் வன்முறைக்கெதிரான அக்கறையுள்ள தரப்பினர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திலீப்குமார் தெரிவித்தார்.
மாவட்ட செயலகத்தின் ஒத்துழைப்புடன் சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் இச்செயல் திட்டத்தை அமுல்படுத்துகிறது.