கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்தின் வேண்டுகோளின் பேரில் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு பாடசாலைகளுக்கு இலவசமாக சோலார் சக்தி மின் இணைப்புகளை வழங்குவதற்கு சீன அரசாங்கம் முன் வந்துள்ளது.
இதற்கு அமைய கிழக்கு மாகாணத்தில் உள்ள 58 பாடசாலைகளுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சோலார் சக்தி மின் இணைப்புகளை வழங்குவதற்கு சீன அரசாங்கம் முன்வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எட்டு பாடசாலைகளுக்கு சோலார் சக்தி மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயப் பிரிவில் உள்ள கோரகள்ளி மடு ஸ்ரீரமண மகரிஷி வித்தியாலயத்துக்கு சோலார் சக்தி மின் இணைப்புகளை வழங்கும் விசேட நிகழ்வு கல்குடா கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி தலைமையில் நடைபெற்றது. இதன் போது சீனா குடியரசின் இலங்கைக்கான தூதுவராலயத்தின் பிரதி தூதுவர் கூவெய் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த சோலார் சக்தி மின் இணைப்புகளை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்க ஆளுநரின் செயலாளர் மதநாயக்க உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர் இலங்கைக்கான சீனா தூதுவர் ஆலய பிரதி தூதுவர் இங்கு கருத்து வெளியிடுகையில், இலங்கை திருநாட்டுடன் நெருங்கிய நட்புறவை வளர்த்துக் கொள்வதற்கு சீன அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் இதன் அடிப்படையில் நாட்டில் நிலவும் மின்சார தடை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலையினை கருத்திற்கொண்டு இந்த சோலார் சக்தி மின் இணைப்புகளை வழங்குவதற்கு சீன அரசாங்கம் முன் வந்திருப்பதாகவும் எதிர்காலத்தில் இலங்கைக்கு தேவையான பல்வேறு உதவிகளை வழங்குவதற்கு சீன அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார