மட்டக்களப்பு மாவட்டத்தில் 71 மாடுகளுக்கு தொற்று நோய் பரவியுள்ளது.

 


நாடு முழுவதிலும் மாடுகளுக்கு பரவி வரும் நோயானது மட்டக்களப்பு மாவட்டத்திலும் பரவியுள்ளது.இதுவரை 71 மாடுகளுக்கு இந்நோய் பரவியுள்ளது என்று தெரிவித்த கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதி பணிப்பாளர் டாக்டர்  திருமதி உதயராணி குகேந்திரன் ஆனால் இறப்பு ஏற்படவில்லை என்றார்.

செங்கலடி கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேச செயலகப்பிரிவுகளில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றை இல்லாதொழிக்க எமது திணைக்களத்தினால் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாட்டிறைச்சியினை பொதுமக்கள் உணவாக உட்கொள்வது தொடர்பாக அந்தந்த உள்ளுராட்சி சபை பிரிவுகளிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்களே தீர்மானிப்பர்.அறுவைக்கு கொண்டுவரப்படும் மாடுகள் பரிசோதனை செய்யப்பட்டு நோய் பரவாத மாடுகள் என சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினால் இறைச்சிக்காக பயன்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.