மட்டக்களப்பிற்கு உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் விஜயம்!








(மட்டக்களப்பு நிருபர்)



 மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுக்கும்  இலங்கைக்கான உலக உணவுத் திட்ட வதிவிடப் பணிப்பாளர் அப்தூல் ரகிம் சித்திக்கிற்கும் இடையிலான விசேட  சந்திப்பு மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்றது.

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உலக உணவு திட்ட நிறுவனம் அரசாங்கத்துடன் இணைந்து பல செற்றிட்டங்களை மட்டக்களப்பில்  நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவை வழங்குவதற்காக வீட்டுத்தோட்டம் மற்றும் கோழி வளர்ப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன்,
இத்திட்டத்தினை  மேலும் நான்கு கல்வி வலயத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான கோரிக்கை இதன்போது  விடுக்கப்பட்டது.

அத்தோடு மாவட்ட நிலைபேறான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும், காலநிலை மாற்றத்தில் தாங்குதிறன் தன்மை  திட்டங்களை செயற்படுத்துமாறு அரசாங்க அதிபதினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அத்துடன் அனர்த்த அபாயங்களை குறைப்பதற்கான செயற்திட்டங்களை ஏனைய  பிரதேச செயலகப் பிரிவுகளில் நடைமுறைப்படுத்துமாறு அதிபரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில்  அரசாங்க கூட்டான்மை அதிகாரி முஸ்தபா நிஹ்மத், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான ஆர். ஜதிஸ்குமார், வி.நவநீதன், உலக உணவு திட்ட உயர் அதிகாரிகள், உலக உணவு திட்டம் நிகழ்ச்சி திட்ட உதவியாளர் திருமதி.ரஜனி கேதீஸ்வரன் உட்பட  பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.