இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (21) நடைபெறுகிறது.

 


இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (21) நடைபெறுகிறது.

இந்நிலையில், இலங்கையின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் 1982 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதிதுவப்படுத்தி போட்டியிட்ட ஜே.ஆர். ஜயவர்தன தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேகடுவவை தோற்கடித்து 52.91% வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றார்.

இரண்டாவது ஜனாதிபதி தேர்தல் 1988 ஆம் ஆண்டு நடைபெற்றதுடன், அதில் சிறிமாவோ பண்டாரநாயக்கவை தோற்கடித்து ரணசிங்க பிரமதாச 50.43% வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றார்.

1993 ஆம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை தாக்குதலில் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரமதாச உயிரிழந்த நிலையில், அப்போது பிரதமராக பதவி வகித்த டீ.பீ. விஜேதுங்க நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தெரிவானார்.

அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 62.26% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் காமினி திசாநாயக்க கொலை செய்யப்பட்ட பின்னர் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் அவரது பாரியார் ஸ்ரீமா திசாநாயக்க போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்து 51.12% வாக்குகளை பெற்று சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் இலங்கையின் ஜனாதிபதியானார்.  

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 50.02% வாக்குகளை பெற்ற மஹிந்த ராஜபக்ஷ தன்னை எதிர்த்து போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்தே வெற்றிப்பெற்றார்.

அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்ட நிலையில் அவரை எதிர்த்து சரத் பொன்சேக்கா போட்டியிட்டார்.  அந்த தேர்தலில் 57.88% வாக்குகளை பெற்ற மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியானார்.

இந்நிலையில், 7 ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தல் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில், அதில் மைத்திரிபால சிறிசேன 51.28% வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றார். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற   ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 47.58% வாக்குகளை மட்டுமே பெற்றார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற  ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ 52.25% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அவரை எதிர்த்து  சஜித் பிரேமதாச மற்றும் அனுர குமாரதிசாநாயக்க ஆகியோர் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.