வரி செலுத்தாத நபர்களின் வளாகங்களுக்கு சென்று வரி வசூலிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தபட உள்ளது

 


2023/2024 மதிப்பீட்டு ஆண்டு தொடர்பில், இதுவரை வரி செலுத்தாத நபர்களின் வளாகங்களுக்கு சென்று வரி வசூலிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1417 பில்லியன் ரூபாவை வரியாக வசூலித்துள்ளது.

இது 2024 ஆம் ஆண்டிற்கான வருவாய் இலக்கான 2024 பில்லியன் ரூபாயில் 70 சதவீதத்தை தாண்டிய ஒரு எண்ணிக்கையாகும்.

எவ்வாறாயினும், சுயமதிப்பீட்டுக் கொடுப்பனவுகளின் கீழ் செலுத்த வேண்டிய வரி செலுத்துவோர் இன்னும் இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளதால், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அவர்களின் வளாகங்களுக்குச் சென்று அவற்றை வசூலிக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, செலுத்தப்படாத சுயமதிப்பீட்டு வரியை சட்ட நடைமுறைக்கு ஏற்ப உடனடியாக வசூலிக்க அந்த திணைக்களம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.