மட்டக்களப்பு மாவட்ட இலக்கியப் போட்டித் தொடரில் வெற்றியீட்டியவர்களுக்கான பாராட்டும் நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர் ஜி பிரணவன் தலைமையில் இடம் பெற்றது.
மாவட்ட செயலகமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் பாராட்டு விழாவானது மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில்
இடம் பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.
பாரம்பரிய முறையில் மங்கல விளக்கேற்றி தமிழ் தாய் வாழ்த்துப்பாடி இந் நிகழ்வு ஆரம்பமாகியது.
இதன் போது பாடல் இசைத்தல், இலக்கிய விமர்சனம், சிறுகதையாக்கம், பேச்சு, நடனம், கவிதை, கட்டுரை, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கும் கௌரவிப்புகள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவருபரஞ்சினி முகுந்தன், கிழக்கு மாகண கலாசார பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மாவட்ட கலாசார உத்தியோகத்தர்களான எம்.எ.சி. ஜெய்னுலாப்தீன், மற்றும் உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சிறார்களுக்கு கலை, கலாசார, இலக்கியம் தொடர்பான போட்டிகளின் மூலம் அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க முடிவதுடன் தேசிய மட்டத்திலும் இவர்கள் வெற்றி பெற வேண்டும் என அரசாங்க அதிபர் கருத்து தெரிவித்தார்.