விவசாயிகளினால் தொல்லியல் துறையினருக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

 


திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச பகுதியில் (  2025.01.01 )  குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட விவசாயிகளினால் தொல்லியல் துறையினருக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  இடம்பெற்றது.

1962 ஆம் ஆண்டு தொடக்கம் 1985 வரையான காலப் பகுதிகள் வரைக்கும் திருகோணமலை மாவட்டத்தில் மிகப்பெரிய நெற்களஞ்சியசாலையாக விளங்கிய  குறித்த இடத்தில் 1985 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் குச்சவெளி  காவல் நிலையம் தற்காலிகமாக இயங்கி வந்தது.

கடந்த ஆண்டு குச்சவெளி  காவல் நிலையம் அவ்விடத்தில் இருந்து இடம் மாற்றம் சென்றதை அடுத்து குறித்த இடம் மீண்டும் நெற்களஞ்சிய சாலையாக இயக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், கடந்த 28 12 2024 ஆம் திகதி இரவு வேளையில் இலங்கை தொல்லியல் திணைக்களத்தினரால் அவ்விடம் ‘தொல்லியல் திணைக்களத்திற்குரிய இடம்’ என பதாதை வைக்கப்பட்டது.

ஏற்கனவே அவ்விடத்தில் தொல்லியல் துறைக்கு என அதிலிருந்து நான்கு ஏக்கர்  அளவு காணி ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், அதற்கு மேல் அதிகமாக   அடாவடி  முறையில் தொல்லியல் துறையினர் காணிகளை தம்பசப்படுத்தி இருக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட  பெருமளவிலான காணிகள் தொல்லியல் துறையினரால் அடாவடியான முறையில் கையகப்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குறித்த நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி குச்சவெளி பிரதேச விவசாயிகள் ஒன்று கூடி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியதோடு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வினை பெற்று அந்தக் காணியை மீண்டும் நெற்களஞ்சிய சாலையாக பயன்படுத்துவதற்கு அனுமதி தருமாறு கோரி குச்சவெளி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்…