உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது. அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம் செல்லும் ரயிலில் ஏற ஒரே நேரத்தில் பயணிகள் முண்டியடித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கிய படுகாயமடைந்த மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது அறிந்து துன்பமடைந்தேன். தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்த அனைவருடன் என் எண்ணங்கள் உள்ளன.”
“காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த நெரிசலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரிகள் உதவி வருகின்றனர்,” என பதிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.