இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழக மீனவர்களுக்கு7ஆம் திகதி வரை விளக்கமறியல் .

 


இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்களையும், அவர்களின் 5 விசைப்படகுகளையும்  எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவானால்  ஞாயிற்றுக்கிழமை (23) உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம்  பகுதியை சேர்ந்த 32 மீனவர்கள் அவர்களின் அதி நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் 5 படகுடன் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (23)  அதிகாலை கடற்படையினரால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் வடமத்திய மாகாண கடற் படையினரின் கூட்டு நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட குறித்த 32 இந்திய மீனவர்களும் கடற்படையின் விசாரணைகளின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (23)  மாலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்ட நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் 32 மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 32 மீனவர்களையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்களையும், அவர்களின் 5 விசைப்படகுகளையும் மீட்க இந்திய மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.