இரண்டாம் மொழி கற்கைநெறி இறுதி நாள் கலை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

 







 
இரண்டாம் மொழி கற்கைநெறி இறுதி நாள் கலை நிகழ்வு
தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (நிலட்) அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட 100 மற்றும் 150 மணித்தியால இரண்டாம் மொழி பயிற்சிநெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களின் இறுதி நாள் கலை நிகழ்வு மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மருதூர் கொத்தன் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இரண்டாம் மொழி வளவாளர் ஐ.எம்.அபூல் ஹசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எம்.ஹிர்பகான், கல்முனை சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஹாதி இஸ்மாயீல், சிறைச்சாலை உத்தியோகத்தர் எம்.எம்.முஹம்மட் நகீப் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
மேலும், குறித்த நிகழ்வில் இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியினைப் பூர்த்தி செய்த பயிலுனர்களால் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு சிறப்பாக இடம்பெற்றன.
2020ம் ஆண்டு அரச கருமமொழி அமைச்சினால் வெளியிடப்பட்ட 18ம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக அரச உத்தியோகத்தர்களின் மொழிப்புலமையை விருத்தி செய்யுமுகமாக மேற்கொள்ளப்பட்ட பயிற்சிநெறி என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த பாடநெறியை சூம் (நிகழ்நிலை) தொழிநுட்பம் ஊடாக நாட்டின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயனடைந்ததுடன், இப்பாடநெறியூடாக சமூக நல்லிணக்கம் பயிலுனர்களிடையே ஏற்பட்ட சம்பவம் இறுதி நிகழ்வில் தெளிவாகியமை சுட்டிக்காட்டத்தக்கது.