கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது

 

 


 

கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதாள உலக மன்னன் கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பாலவிய பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிதாரி இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதுக்கடை நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கிதாரி 34 வயதான அஸ்மான் ஷெரிப்தீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இலங்கை இராணுவ கமாண்டோ படைப்பிரிவின் முன்னாள் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சட்டத்தரணி போன்று மாறுவேடமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்த பயன்படுத்திய ஆயுதத்தை குற்றவியல் நடைமுறைச் சட்டப் புத்தகத்தில் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளார்.
பாதாள உலக மன்னன் கணேமுல்ல சஞ்சீவவை விளக்கமறியலில் வைக்கும் வழக்கு தொடர்பாக நீதிமன்ற இலக்கம் 05 க்குள் சாட்சியமளிக்கும் போதே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயங்களுக்கு உள்ளான கணேமுல்ல சஞ்சீவ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நேபாளத்திலிருந்து 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் திகதி நாடு திரும்பியதும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதாள உலக நபர் கைது செய்யப்பட்டார்.
கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கடந்த வருடம் ஜூன் மாதம் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.
பூசா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள “கணேமுல்ல சஞ்சீவ” இன்று காலை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.