இலங்கையில் அச்சு, இலத்திரனியல், இணையத்தளம், பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் மொழிபேசும் ஊடகவியலாளர்கள் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு தனித்துவத்துடன் செயற்படக்கூடிய அமைப்பை உருவாக்குவதற்கான முதல் முயற்சியாக விசேட கூட்டமொன்று இன்று (16) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதன்போது, தமிழ் ஊடகவியலாளர்களுக்கான புதிய ஒன்றியத்தின் நிர்வாக தெரிவுகள் இடம்பெற்றன. இதற்கமைய ஒன்றியத்தின் தலைவராக தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர் தெரிவு செய்யப்பட்டார்.
ஒன்றியத்தின் செயலாளராக தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர்.சிவராஜாவும் பொருளாளராக திருமதி வருணி (ஜூனியர் தமிழன் பத்திரிகை) தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் ஒன்றியத்தின் பிரதி தலைவர்களாக தில்லையம்பலம் தரணீதரன் (சுயாதீன ஊடகவியலாளர்), கலாவர்சினி கனகரட்ணம் (சுயாதீன ஊடகவியலாளர்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் உதவி செயலாளர்களாக மஹேஸ்வரி விஜயனந்தன் (சுயாதீன ஊடகவியலாளர்), நிர்ஷன் இராமானுஜம் (சுயாதீன ஊடகவியலாளர்) ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் உதவிப் பொருளாளராக பார்த்தீபன் (சுயாதீன ஊடகவியலாளர்) தெரிவு செய்யப்பட்டதுடன் ஒவ்வொரு பிரதேசங்களுக்குமான பிராந்திய ஒருங்கிணைப்பாளர்களும் இதன்போது தெரிவு செய்யப்பட்டனர்.
அண்மையில் மறைந்த சிரேஷ்ட ஊடகர் இராஜநாயகம் பாரதிக்கும் மரணித்த ஊடகவியலாளர்களுக்கும் இதன் போது அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஒன்றியத்தின் செயற்பாடுகளை கண்காணித்து ஆலோசனைகளை வழங்க உயர்பீடம் ஒன்றும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.