தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு பதிலாக புதிய பரீட்சை – பிரதமர்
மாணவர்கள் மீதான உளவியல் அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், 2028 ஆம் ஆண்டளவில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பதிலாக புதிய பரீட்சை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மேலும் குறிப்பிட்டதாவது: தற்போதைய புலமைப்பரிசில் பரீட்சை மறுசீரமைக்கப்படும். புதிய நிபுணர் குழுவை நியமித்து மாற்றுப் பரீட்சை குறித்து ஆராயப்படவுள்ளது.மாணவர்களுக்கு ஏற்படும் தேவையற்ற அழுத்தங்களை குறைத்தல்,கல்வி முன்னேற்றத்துக்கான நியாயமான வாய்ப்பு என்பவற்றைக் கருதியே புதிய பரீட்சை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.இவ்விடயங்களில்
புதிய குழு கவனம் செலுத்தும்.
புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய கடுமையான போட்டிக்கான மூல காரணத்தை இதன்போது எடுத்துரைத்த பிரதமர், பாடசாலை தரத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் மாணவர்களை புகழ்பெற்ற நிறுவனங்களில் சேரத் தூண்டுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்த இடைவெளிகளைக் குறைத்து, மிகவும் சமமான கல்வி முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நீண்டகால இலக்கு என்று அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றில் கல்விக்காக அரசாங்கம் பாரிய தொகையை ஒதுக்கியுள்ளதாகவும், கல்வி அமைச்சினால் முன்மொழியப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தத்திற்காக ஐந்து அடிப்படைத் தூண்களைக் கொண்ட திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.