வரதன்
" எதிர்காலத்தை கட்டியெழுப்ப வலிமையான பெண் தான் வழிகாட்டி ' என்ற தொனிப் பொருளின் கீழ் தேசிய வைபவமாக மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெறுகின்ற இவ் வேளையில் அதற்கு நிகராக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலும் மகளிர் தின நிகழ்வு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் அவர்களின் தலைமையில் (07.03.2025) கோட்டமுனை மெதடிஸ்த தேவாலய முன்றில் பிற்பகல் 2:30 மணிக்கு ஆரம்பமாகியது. இந்நிகழ்வானது மும்மத இறைவணக்கத்துடன் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன் அவர்களின் வரவேற்பு உரையுடன் ஆரம்பமானது.
இந்த மகளிர் தின நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் இயங்கிவரும் விஸ்வ பரத கலாலயா நாட்டிய பள்ளி மற்றும் நிருத்திய கலாலய மாணவர்களின் நடனங்கள் இடம்பெற்றதுடன் கலாசார மத்திய நிலைய கலைஞர்களின் நாடகமும் இடம்பெற்றது அத்துடன் மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. அதுமட்டுமன்றி பெண் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் இடம் பெற்றது.
மேலும் கலந்துகொண்ட உத்தியோகத்தர்களையும், மகளிர் சங்க மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களையும் களிப்பூட்டும் வகையில் வினோத விளையாட்டுக்களும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக மண்முனை வடக்கு மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சந்திர சோதி ஜெயதீஸ்வரன் அவர்களின் நன்றி உரையுடன் மகளிர் தின நிகழ்வு இனிதே நிறைவுற்றது.