பத்தாம் வகுப்பில் படிக்கும் எட்டு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த கணித ஆசிரியருக்கு விளக்கமறியல் .

 


பத்தாம் வகுப்பில் படிக்கும் எட்டு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கடந்த 7 ஆம் திகதி அரலகங்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கணித ஆசிரியர், பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் 8 ஆம் திகதி ஆஜர்படுத்தப்பட்டார், அவரை இந்த மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் திருமதி சந்தியா கருணாரத்ன உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கணித ஆசிரியரை மனநல மருத்துவரிடம் ஆஜர்படுத்த அனுமதியளிக்குமாறு பொலிஸார்,நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர், அதன்படி, சிறை அதிகாரிகள் மூலம் அவரை  மனநல மருத்துவரிடம் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார். தெரிவிக்கின்றனர்.

திம்புலாகல கல்வி வலயத்தில் உள்ள அரலகங்வில கல்விப் பிரிவில் உள்ள ஒரு உயர்நிலைப் பாடசாலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் எட்டு மாணவிகள், தங்களை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி அளித்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கணித ஆசிரியர் கடந்த 7 ஆம் திகதி அரலகங்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் மாணவிகளின் பெற்றோருக்கு நீதிமன்றப் படிவங்கள் வழங்கப்பட்ட பின்னர், மாணவிகள் தெஹியத்தகண்டிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அரலகங்வில பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரதீப் செனவிரத்ன  தெரிவித்தார்.