மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உள சமூக வலுவூட்டல் செயலமர்வு .
















மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான  உள சமூக வலுவூட்டல் செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளீதரன் தலைமையில்  மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய  சுகாதார சேவைகள்  பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் பங்கு பற்றுதலுடன் மாவட்ட முன்பிள்ளைப்பருவ  அபிவிருத்தி இணைப்பாளர் முரளிதரன் ஒழுங்கு படுத்தலின் கீழ் வைத்தியர் சதுர்முகம் மண்டபத்தில் இன்று (29) இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான தொடர்பாடல் மற்றும் உளநல ஆற்றுப்படுத்தலை மேம்படுத்துவதற்கான ஒரு நாள் பயிற்சி செயலமர்வை ஒழுங்கு செய்திருந்தனர்.

மாவட்டத்தில் 563 முன்பள்ளிகள் இயங்கி வருகின்ற நிலையில் ஆரம்பக்கட்டமாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 71  முன்பள்ளிகளைச்சேர்ந்த ஆசிரியர்கள் இச் செயலமர்வில் பங்குபற்றினர்.

 இதன் போது முன்பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாடுகளின் போது எவ்வகையான உளவியல் முறைகளை பயன் படுத்த வேண்டும், பிள்ளைகளின் நடத்தையில் மாற்றத்தை அவதானித்தல், தொடர்பாடல் மற்றும் உளநல ஆற்றுப்படுத்தல் போன்ற  பல உளவியல் சார் நுட்பங்கள் இதன் போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் உளநல மருத்துவர் திருமதி ஜெ. சகாயதர்ஷினி, மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளி உதவி கல்விப் பணிப்பாளர் திருமதி அனுரேகா,   அபிவிருத்தி  உத்தியோகத்தர்  திருமதி ப .அனுரேகா, திருமதி சுபாநந்தினி மாவட்ட உளவளத் துணை இணைப்பாளர் என பலர் கலந்து கொண்டனர்.