காங்கேசன்துறை நோக்கி பயணித்த சிவகங்கை கப்பல் கடல் சீற்றத்தால் தத்தளிப்பு, கப்பல் பாதியிலேயே நாகை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 



நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணித்த சிவகங்கை கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது பயணிகள் அலறியதால் கப்பல் பாதியிலேயே நாகை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் 22ம் திகதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமாகிய நிலையில் பின்னர் கடல் காற்று அதிகமாக வீசுவதால் பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வானிலை மாற்றம் சீரடைந்ததும் மீண்டும் மார்ச் 1 முதல் நாகப்பட்டினம்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு 78 பயணிகளுடன் புறப்பட்டது.
வேளாங்கண்ணிக்கு தென்கிழக்கே 15 மைல்கல் தொலைவில் கப்பல் சென்றபோது கடல் சீற்றம் அதிகமானது.
இதனால் கப்பல் கடலில் தத்தளிக்க ஆரம்பித்ததால் பயணிகள் அலறினர். வானிலை மோசமானதை தொடர்ந்து கப்பலை அவசர, அவசரமாக நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கப்பலின் கப்டன் திருப்பியுள்ளார்.
இதை தொடர்ந்து நேற்று(2) மற்றும் இன்று (3) கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது.