அதிக ஞாபகத் திறன் மூலம் 650 க்கும் மேற்பட்ட பட அட்டைகளின் பெயர்களை ஒப்புவித்து மட்டக்களப்பை சேர்ந்த இரண்டறை வயதான ஆன குழந்தை துஷ்யந்தன் மகிஷரான் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் அதிக ஞாபகத் திறன் மூலம் 650 க்கும் மேற்பட்ட பட அட்டைகளின் பெயர்களை அடையாளம் கண்டு ஒப்புவித்து சோழன் உலக சாதனை படைத்த 29 மாதங்களே ஆன மட்டக்களப்பை சேர்ந்த குழந்தை துஷ்யந்தன் மகிஷரான் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதி ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இவர் மட்டக்களப்பு நாவற்குடாவில் வசித்து வரும் மருத்துவர் தர்ம சுந்தரம் துஷ்யந்தன் மற்றும் மருத்துவர் ரமாஜினி துஷ்யந்தன் ஆகியோரின் குழந்தையும் ஆவார். சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் மற்றும் கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் என்பன இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்தது.
இந் நிகழ்வானது சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் நடைபெற்றது
இலங்கைக்கான சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் துணைச் செயலாளர் கதிரவன் த. இன்ப ராசா தலமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண சபை பிரதி பிரதம செயலாளர் கோபாலரத்தினம் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக அருட்பணி தந்தை ஆ. ஜேசுதாசன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகிய கற்கைகள் நிர்வாகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கெனடி கலந்து கொண்டார். மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரி அதிபர் மா. சோமசூரியம் கண்ணகி கலை இலக்கிய கூடல் தலைவர் செங்கதிரோன் தா. கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிபர் மா. குலேந்திர ராஜா உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சோழன் உலக சாதனை தங்கப்பதக்கம், சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், சோழன் சின்னம், சோழன் உலக சாதனை விவரம் அடங்கிய கோவை மற்றும் நினைவு கேடயம் என்பன வழங்கி சாதனைக் குழந்தை கௌரவிக்கப்பட்டார். அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் பார்வையாளர்களால் சிறப்பு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. சோழன் உலக சாதனை புத்தகத்தில் கிழக்கு மாகாணத்தில் இடம்பிடித்த மிகக்குறைந்த வயதுடைய குழந்தையே இவர் என்பது குறிப்பிடத்தக்கது.