மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுர் உற்பத்தி விற்பனையாளர்களின் இரு தினங்களை கொண்ட சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வானது இன்றைய தினம் (2025.04.10) பிரதேச செயலாளர் உ உதயஸ்ரீதர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் உதவி பிரதேச செயலாளர் சத்யகௌரி தரணிதரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ் ராஜ்பாபு கலந்து கொண்டிருந்ததுடன், மாவட்ட செயலக சமுர்த்தி கணக்காய்வு உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதுடன், நுகர்வோர்களிடம் இருந்து வருகின்ற கேள்விகள் மற்றும் விற்பனை வாய்ப்புகளை சலுகை விலையில் மக்கள் கொள்வனவு செய்வதற்கு இக் கண்காட்சி மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் போது பிரதேச செயலக பிரிவின் கல்லாறு, எருவில் மற்றும் மாங்காடு வலயங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு அருணலு நுகர்வு கடன் மற்றும் வாழ்வாதார கடன் என்பன வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வினை பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் நிருவாக உத்தியோகத்தர் வி.தவேந்திரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் புவனேஸ்வரி ஜீவகுமார், முகாமைத்துவ பணிப்பளார் கே. உதயகுமார், கருத்திட்ட முகாமையாளர் விமலா யோகேந்திரன் ,மாங்காடு, எருவில், கல்லாறு சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள், சமுர்த்தி வர்த்தக சங்கத்தினர், விற்பனையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் .